Blog Archive

Wednesday, January 04, 2017

வல்லரசாகும் கனவு
வயல்களில் உழவர் பிணங்கள்
வங்கிகளில் செல்லா காசுக்கு மரணங்கள்
பதுக்குபவர்களுக்கு வசதியாக இரண்டாயிரம்
பக்கிகளுக்கு சில்லறைத் தேட இரண்டாயிரம்
குடுமிப் பிடியில் மக்கள்
காவல்காரர்கள் திருடுகிறார்கள்
திருடர் கையிலும்
அதிகார மாட்சியில் அடக்குமுறை
போர்வாள் தம்தம் குடிமக்கள் மீதே
ஹிட்லர்கூட தன்முனைப்பில்
தவிடு பொடியானான்
இந்தியத் தலைவனால்
வல்லரசான நாடுகளின் வரலாறு
மக்களின் பிணங்களின் மீதுதான் 
இது நடைமுறை

இந்தியக் கனவும் இனிதே நிறைவுறும்.

Thursday, December 22, 2016

நான் என்னவாகி யிருப்பேன்
மிருகமாக
அல்லது
அன்பே
என் மீது எவரும் காட்டாத
எனக்கும்
எவர்மீதும்
அன்பு செலுத்த தெரியாத
மிருகமாய்

நீ இல்லை யென்றால்
என்மீது அன்புசெலுத்த
எவரும் பிறக்கவில்லை என்பதைப்போல
நான் அன்புகாட்ட
எவரும் இருந்திருக்கமாட்டார்

பார்த்தவுடன் பற்றிக்கொள்கிறது
உன்மீதான அன்பு
பார்ப்பதற்கு
உன்னெதிர்
நிழற்படம்
தொலை அழைப்பு
என்று எனக்கு எதுவும்
தேவையாய் இருக்கவில்லை
உன்நினைவுகள்
என்றுமே வாழ்பவை

வானைவிட
நீரைவிட
நிலத்தைவிட
நம் அன்பு பெரியது
நாம் சொல்லவில்லை
யாவரும் சொல்வர்
என்மீது
என்கோபம்
என்மீது உன்அன்பு
என் செளகரியங்களில்
உன்அக்கறை
இவைத்தவிர

என்னவேன்டும்சாட்சியாக
மினீஸ்வரனுக்கு நேர்ந்துவிட்ட ஆட்டுக் கிடாய்


மினீஸ்வரனுக்கு நேர்ந்துவிட்ட ஆட்டுக் கிடாய்
எதிரே வந்த மாதிரி
அம்புட்டு நாத்தம்
குதிரைமேல் சவாரி
எலுமிச்சைக் குத்தின வீச்சரிவாளோடு
பெரிய வீட்டு வாரிசு
பார்த்த சனம்  
சாமியக் கண்டு விலகி ஒடுங்கிச்சி

அந்த அதிகாலை வேளையில்
முனியம்மா
மஞ்சபூசி
குளிச்சி முழுகி
வாளிப்பான கருங்கல் மேனி மினுக்க
சந்தன அபிஷேகம் மாதிரி முகமும்
முண்டை செருக்கி

கிழக்குப்பார்த்த வெட்ட வெளி டீக்கடைக்குள்ளார
அதிகாலை கிடாவெட்டு மினீஸ்வரனுக்கு
சீக்குப் பயச்சாமி
இன்னொத்தையும் காவு கொண்டான்
ஊரே நாறிச்சி
கேக்க சனம் இல்ல
கெட்ட சாதிக்கும் தெம்பில்ல.
பாவப் பொறப்புங்க
எத்தனைப் பொம்பளைங்க
இதுக்கு மட்டும் சாதியில்ல
எங்க ஊரு சாமிங்களுக்கு.

சாமிக்கு அடிவயித்து கட்டியாம்.
அடையாறு ஆசுபத்திரிக்குப் போய் வருதாம்
விரசா நெருங்கிடுமாம் சாவு
சாமியோட சாவுல

அத்தனைச் சந்தோஷம் குடிபடைக்கு.

Wednesday, January 15, 2014

பொங்கலோ
பொங்கல்
_____________________

தண்ணீர் இல்லாத பொங்கல்
கேட்டது உண்மைதான்..
அர்த்தம் தெரியாத இயற்கையோ
மழையைப் பொய்த்தது...

கோடி கோடியாய்
கொட்டிக் கொடுக்கிற
தண்ணீரை
என் பாட்டன் குடித்தான்
அப்பன் குடித்தான்
நானும் குடித்தேன்
என் பிள்ளைகளோ
நீந்திக் களித்தனர்..

நூறுநாள் வேலையில்
கிடைத்த நோட்டை
நாட்டுக்கு கொடுத்தான்
என் ஆதித் தமிழன்
அரசாங்கம் மட்டுமா
இலவசம் கொடுக்கிறது
நம்மூர் ஏழையும்
நன்றாகக் கொடுக்கிறான்
அரசு கருவூலம்
செல்வத்தில் மிதக்கிறது

மாட்டுப் பொங்கலில்
படையலிடணும்
செத்து ஒழிந்த
அத்தனை மூதாதைக்கும்
ஆட்டுக்கறி வாங்கணும்
கோழி சமைக்கணும்
மீனு வாங்கணும்
கருவாட்டு குழம்பு
ராணி மார்க் சுருட்டு
சூடாக பட்டைச்சாரயம்
என்ன செய்யப் போகிறேன்..

மாமழை போற்றி
ஏமாந்த குடும்பம்
விதைக்கால் விட்டு
விதை நெல்லும் போச்சு
கடைசியில்
என் அப்பன் செய்ததையே
நானும் செய்தேன்
பொங்கல் கொண்டாட..

சந்தோஷம் கூடிடும்
ராஜஸ்தான் மார்வாடி
கறாறானவன்..
பைனான்ஸ் கம்பெனிகள் போல
அவன் அடியாட்களை
அமர்த்துவதில்லை
வீட்டு வாசலில் வந்து நிற்பதுமில்லை
மூணு பண்ணெண்டு முப்பத்தாறு வட்டி
உண்மையில் அவன் ரொம்ப நல்லவன்

நல்லநாளும் அதுவுமா
பொங்கப்பானையில கட்டுற மஞ்சளை
கழுத்துல கட்டினான்
ஆதிதமிழன்

இரண்டு நாளைக்கு
தண்ணிக்குப் பஞ்சமில்லே
அவனோட மூதாதைகளின்
ஆத்துமாவுக்கும் தான்..
சாந்தி..
ஓம் சாந்தி..

பொங்கலோ பொங்கல்
புதுசரக்குப் பொங்கல்
பொங்கலோ பொங்கல்
புதுசரக்குப் பொங்கல்...
பல கோடி வருமானம்
அரசாங்கப் பொங்கல்..

நூறு ரூபா
வெல்லம்
அரிசியோடு
அம்மா படம் போட்ட
அழகு துணிப்பை
கடைகோடி தமிழனுக்கு
நம்பிக்கைப் பிறந்தது

வானம் பொய்த்தது
அரசாங்கம் தண்ணி விக்குது
சாவு வந்தது
அரசாங்கம் நூற்றியெட்டை அனுப்பிச்சி
இலவச
டிவி
அரிசி
வேட்டி சேலை
கிரைண்டர்
மிக்ஸி
முதியோர் பென்சன்
வாழ்க அரசு..நம் தமிழ் அரசு
அரசாங்கத்தின் மேல்
அம்புட்டு நம்பிக்கை
நிம்மதி பெருமூச்சு..

ஆதித்தமிழனுக்கு..
அடுத்த தீவாளிக்கு
அப்பொறம் வரும் பொங்கலுக்கு
அப்பனுக்குப் படைக்க
முனியாண்டி சாமிக்கு
மனசு நல்லா குளிர
வீட்டுக்காரி தாலியை
சேட்டுக் கடையில வைக்க வேணாம்
அம்மா நல்லவங்க
தாத்தா ரொம்ப நல்லவரு
பச்ச கார்டுக்கு
ஒரு குவாட்டரு நிச்சயம்

பொங்கலோ பொங்கல்
புதுசரக்குப் பொங்கல்
பொங்கலோ பொங்கல்
புதுசரக்குப் பொங்கல்...
நம்பிக்கைப் பொங்கல்
நம்தமிழின் பொங்கல்...

Saturday, June 23, 2007

சோகம்

கேட்டது எதுவும் கிட்டவில்லை
மரணம் உட்பட

Saturday, April 21, 2007

கேட்டவர் உண்டோ
யாராகிலும் ?
_____________

என் காதலை நம்பாதே
எந்த காதலராவது
அல்லது
உங்களில் யாராகிலும்..

பொய் சொல்லலாம்.


இங்கே நீதிதான் கிடைக்கும்
எந்த நீதிபதியாவது
அல்லது
உங்களில் யாராகிலும்.

உண்மையும் பேசலாம்

நான் கடவுள்தான்; நம்பு.
எந்த கடவுளராவது
அல்லது
உங்களில் யாராகிலும்.
சாமிகள் சொல்லலாம்


புத்தகம் படி
யாரிட்ட கட்டளை
ஆசிரியர் தவிர.
எந்த புத்தகமாவது.

உலகம் பெரிது
அனுபவம் பலவிதம்
அனுபவி அனுபவி
எந்த தந்தையராவது.

மருமகள் போல
மகளும் ஒரு வீட்டு மருமகள் தானே
நினைத்தவர் உண்டோ
எந்த தாயாவது.

Saturday, March 31, 2007

எத்தனையோ...
கிடைத்தது..நீதியைத் தவிர..
___________________________
சல்லடைப் போட்டுச் சலித்தார்கள்
பெருமளவில் குவிந்தன
கைதவறிய நாணயங்கள்.

கல்யாண மாலைக்கு
காதலிப் பெண்கள் கழற்றி எறிந்த
கைவிரல் மோதிரங்கள்
காதல் பரிசுகள்
இன்னும் எத்தனையோ...

வண்டி வண்டியாய் நாணங்கள்
வாக்குறுதி வார்த்தைகள்

சுண்டலுக்காக விற்கப் பட்ட
காகிதக் கவிதைகளின்
கிழி பட்ட ஏடுகள்

வார்த்தை வாளால் கீறி புதைபட்ட
மறுதலிக்கப் பட்ட
காதல் இதயங்கள்

அவசரத்தில் இட்ட
முத்த மழைகள்
காதல் தீ எரித்த
காதல் திருடர்களின்
கன்னக் கதுப்பில் கசிந்தோடிய கண்ணீர்..
இன்னும் எத்தனையோ...

அலை திருடிய
பிளாஸ்டிக் செருப்பால்
அம்மாவிடம் உதை வாங்கிய
பிஞ்சு மழலையரின் அழுகை

காலைதோறும் கால் நடையான
இதய வாக்கர்களின் பெருமூச்சோடு
வேர்வை கசிந்த ஈர மண்

தமிழ்மாநாட்டில்
தலையெடுத்த சான்றோரின்
சிலை வடித்த கண்ணீரும்
காதல் தமிழும்..

அரசியல்வாதிகள்
அந்திமத்தில் நடத்திய
கட்சித் தாவலில்
கை மாறிய போது
வேண்டுமென்றே
கைவிடடப் பட்ட கொள்கைகள்


சுண்டிச் சோற்றுக்கும்
கஞ்சா இலைக்கும்
கண்பூத்துச் சுற்றிய
போதைக் கால்கள்
இப்படி
இன்னும் எத்தனையோ...

மெரினா மணலை
அலங்கரிக்கும் திட்டத்தில்
லட்சமாய்க் கொட்டி
குப்பையைக் கிளறியதில்
இன்னும் எத்தனையோ...
கிடைத்தது..

கண்ணகி சிலையும்
அவள் கேட்ட நீதியைத் தவிர..--
சக்கரை ரஹஸியம்

''சக்கரை விலை ஏறிக்கிடக்கு
உனக்கு மட்டும் தாராளம்
சக்கரையை வைக்க வேண்டிய இடம்
சிறுநீர் அல்ல''
"இதுபரம்பரை வியாதிப்பா"
டாக்டர் தமாஷ் செய்தார்...

பரம்பரை
என்றதும் தாத்தா ஞாபகம்
பறங்கிப்பேட்டைஅல்வா அவருக்கு உசிரு.
கடலூர் டியூட்டி விட்டு
அல்வாவுக்காக ஆறு மைல் சுற்றுவழி
கொத்தட்டை நேர்வழி விட்டு
பறங்கிப்பேட்டை வழி பஸ் பிடிப்பேன்
திருநெல்வேலி எட்டாத தூரம்.

"எங்க பரம்பரையில் பெஞ்சாதி அதிகம் உண்டு
சக்கரை தட்டுப்பாடுதான் டாக்டர்"
டாக்டர் அசரவில்ல.

"என்னவேலைப் பாக்கிறே"கேட்டார்
"பேங்கில வேலை ராஜா வாட்டம்"

"கார்த்தால எப்ப எழுவே"
"ஏழரை ..விட்டா எட்டு"

"எழுந்தவுடன் என்ன செய்வே"
டாக்டர் கேட்டார்
"பாத்ரூமில் புகை விடுவேன்
வராத போது பேப்பர் கூட படிப்பேன்"

"சாப்பாட்டுப் பழக்கம் எப்படி"
டாக்டர் கேட்டார்
"காலையில் இட்லி சாம்பார் வெட்டுவேன்
காபி, டீ நாளைக்கு எட்டு
மணி தவறாது சிகரெட்டு
மதிய சாப்பாடு முனியாண்டியில
மாலை டிபன்
கேசரி(அ) அல்வா கட்டாயம் உண்டு
ராத்திரி சொல்லட்டா...."கேட்டேன்

"உட்கார்ந்து தின்னும் உன்மத்தன்"
டாக்டர் முணுமுணுத்தார்.

"சரி .. உன் பாட்டன் எப்படி ?
சொல் பார்க்கலாம்"

"தாத்தாவுக்கு எண்பது வயது;கிழம்
விடியலில் துயில் எழும்
வயல் வரப்பில் கடன் கழிக்கும்
காலையில் கேப்பக்களி
மதியான சாப்பாடு மரக்கறி தான்
தோட்டத்துக் காய்கனி, கீரைகள் ஏராளம்
ஆனாலும்
அவரோட மண்புழு 'பாடு'க்கு
இவையெல்லாம் எம்மாத்திரம்?

'போதும் உன் சங்கதி'
புகன்றார் டாக்டர்
'சக்கரை உனக்குப் பரம்பரை இல்லை;
சாப்பிட்ட சக்திய உடம்பு கிரகித்துக் கொள்வது
கற்க: கற்ற பின் நிற்க;அதற்கு தக போல
எஞ்சிடும் சக்கரை புத்திரர் போல;
அதிகம் சேரக்கூடாது
மாத்திரை போடு.
டயட் முக்கியம்;
இதற்கும் மேலாக
இன்னொன்று முக்கியம்
உன் பாட்டன் செய்கிற
எண்பது வயதிலும் மண்புழு உழப்பு.

என் டயபடிக் ரஹஸியம்
புரிய தொடங்கியது.
-கெட்டிக்கார தலைவி
---------------------------------------
சம்பள தேதியில்
இனிப்பு இத்யாதிகள்
வாங்கிச் செல்கிற வழக்கம்
அன்றும் அப்படித்தான்..........

பிரித்து எடுத்த ஸ்வீட் பாக்ஸை
சற்றிக் கொண்டனர் பிள்ளகள்!
மழலையில் கேட்ட கடைக்குட்டி
'அப்பா எனக்கும்'

மனயாட்டி வந்தாள்
வீட்டின் முதல் தைரியசாலி.

'இப்படித்தான் கையில் இருந்தால் தங்காது-
ஊதாரி'
முதல் தகவல் அறிக்கை-
குற்றப் பத்திரிகையை வாசித்தாள்!

பயத்தில் பெற்றோர்கள் பிள்ளகள்
இப்போ எல்லோரும்
என் எதிரணியில்.

எதிர்பார்ப்பு நடந்தேறியது
நிதிஇலாகா சமையற்கட்டிற்கு மாற்றப் பட்டது.
மாமிசம் கூடாது புத்தராய்
கொலஸ்டிரால் புராணம் டாக்டராய்
தினமும் அப்பளம் ரசம் கஞ்சி
சிக்கனம் பின்பற்றப்படுகிறது
பிள்ளைகள் மாட்டினர்
ஞாயிறு கிழமையில் வீட்டில்
நாய்கூட உண்பதில்லை.

கெட்டிக்கார மனைவி
மாசக்கடைசியில்
திடீர் பளபளப்பில்
காஞ்சி புரத்தில் ஒரு சுற்று கூடியிருந்தாள்

இப்போது பெற்றோர்கள்
பிள்ளைகள் என எல்லோரும்
செய்வதறியாது
கையப் பிசைகிறார்கள்
அமர்த்திவிட்டு அவதிபடும்
மக்களைப்போல.......................

மறப்பதற்குள் எடுக்க வேண்டும்

மறப்பதற்குள் எடுக்க வேண்டும்
வகுப்பு.
____________________

பகுபதம்.
நீயும் நானும்

சிவன் பார்வதி.
உறுப்பு இலக்கணம்

லிங்கம் வித்து
அதன் உதாரணம்.

மறப்பதற்குள் எடுக்க வேண்டும்
வகுப்பு.
காகிதக் கவிதைகள் தின்பதற்கு.

நீயா உன் எதிரா
எதிர் எதிர் துருவம் எது
ஆணும் பெண்ணுமா
ஆண்டான் அடிமையா
காமத்தீயின் முன் எரிந்தது
காமனை எரித்தான்
உடைகள் களைந்து.

உண்டானது பருவ வழிபாடு
உண்டாக்கப் பட்டது
உண்டானது
பூமி தளிர் தளிருடல்
ஆலிலை அரசன் எனும் மரம்
பூ பிஞ்சு பேதை
பெண் எனும் போதை
அடிமை பண்பாடு
பகுபதம் பல ஜாதி
மனுகுலம்
இன்னும் இன்னும்
இப்படி.. இப்படியே


லிங்க யோனிப் படிமங்கள்
வழிபாடா
மனப் பாலின் விகார ஒற்றா எச்சமா
எது முதல் எது முடி(வு)
ஆப்பிள் வேண்டுமா
ஆதம் ஏவள் சுற்றிக் கிடந்த அவாவா
எது முதல் ஏன் தொடர்
எல்லாம் மறந்தது
இதுமட்டும் நிஜம்.

மறப்பதற்குள் எடுக்க வேண்டும்
வகுப்பு.
காகிதக் கவிதைகள் தின்பதற்கு.

Wednesday, March 14, 2007

எந்த சுதந்திரம் எங்களுக்கில்லை?

எந்த சுதந்திரம் எங்களுக்கில்லை?
_______________________________________

எந்த சுதந்திரம் எங்களுக்கில்லை?
விடியலே இல்லாத இந்த
வீணர் வாழ்க்கையில்..

கொடிகள் கட்டுவோம்
கோஷங்கள் இடுகிகிறாம்
மந்திரி வருகையில்
மாலை அணிவித்து
மனுக்கள் தருகிறோம்
எந்த சுதந்திரம் எங்களுக்கில்லை ?
விடியலே இல்லாத இந்த
வீணர் வாழ்க்கையில்.

வாக்குகள் அளிக்கிறோம் வாழும் குடிசைகள்
தீப்பற்றி எரிகையில்
வீதிவெளியினை வீடாய்க்கொண்டு
வீழ்ந்துக் கிடக்கிறோம்
எந்த சுதந்திரம் எங்களுக்கில்லை?
விடியலே இல்லாத இந்த
வீணர் வாழ்க்கையில்.

காதல் போதையில் கற்பழிழப்பும்
காவல் நிலையங்களில்
பெண்கள் கற்பழிப்பும்
என்று இத்தனைச் சுதந்திரம் இருக்கையிலே
எந்த சுதந்திரம் எங்களுக்கில்லை?
விடியலே இல்லாத இந்த
வீணர் வாழ்க்கையில்

ஆசைகள் இல்லையா ஆனாலும் வாழ்கிறோம்
மன்னர் மான்யம் ஓழித்த மன்னர்கள்-தினம்
மலம் அள்கிறோம்-என்று
இத்தனைச் சுதந்திரம் இருக்கையிலே
எந்த சுதந்திரம் எங்களுக்கில்லை?
விடியலே இல்லாத இந்த
வீணர் வாழ்க்கையில்


கிராமத்துக் கடற்கரை.

கிராமத்துக் கடற்கரை

அவளின்றி
வெறிச்சோடிப் போன
மனம் போல
எவரும் இல்லா
கிராமத்துக் கடற்கரை.

வழியில்
பெரிதாயக் குறுக்கிடும்
உப்பங்கழி
அகலாத அவளின்
நினைவுகள் போல.

நண்டுப் பிள்ளைகள் நடையுடன்
நேற்று சேர்ந்து நடந்த
காலடிச் சுவடுகள்
மணற் பரப்பெங்கும்
தொடர்கதையாக..

ஜோடித் தென்னையின் அடிவாரத்தில்
அவளுடன் கூடிக் களிகொண்டாடிய
அழியாத மணல் குன்றுகள்
பிரமிடுகள் போல
உள்ளே கல்வெட்டு நினைவுகள்
தழுவிய கணங்களின்
தழும்பான மனவோட்டம்
கடலலையாக

தூரத்தில் திட்டுத் தீவில்
சிறிதும் பெரிதுமாய் சவுக்கு மரங்கள்
நாங்கள் புணர்ச்சிப் புயலில்
சிக்கிய போது
அபயம் அளித்த தென்றல் வங்கிகள்
அதன் அடிவாரத்தில் சல்லி வேரில்
உடைந்துப் போன வளையல் துண்டுகள்
அவள் வராது தவிக்கும்
என் மனம் போல
யாருமில்லாத
எங்களூர் கடற்கரை.